Tuesday 6 May 2014

கட்டார் நாட்டில் வாகனம் செலுத்துவோரின் கவனத்திற்கு!





வாகனம் செலுத்திக் கொண்டு கையடக்க தொலைபேசி
பயன்படுத்துவோருக்கான தண்டப் பணத்தினை குறைந்தது 3000 கட்டார் முதல் கூடியது 10,000 கட்டார் றியால் வரை அதிகரிப்பதுடன் ஒரு வருட சிறைத்தண்டனையும் வழங்க கட்டார் அரசு தீர்மானித்துள்ளது.

கட்டார் நாட்டில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் அதிகமானவை கையடக்க தொலைபேசியினை பாவித்துக் கொண்டு வாகனம் செலுத்துவதனாலேயே ஏற்படுவதாக அறியக்கிடைத்ததனைத் தொடர்ந்து இந்தச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

அதே வேளையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி , வேறு ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி வாகனம் செலுத்துதல் , மதுபோதையில் வாகனம் செலுத்துதல் , போக்குவரத்து விதிகளுக்கு எதிராக செயற்படுதல் , தேவையற்ற விதத்தில் சத்தம் எழுப்புதல் , சுற்றாடலை மாசுபடுத்தும் வகையில் புகை வெளியேறுதல் , அதிவேகமாக பயணித்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு ஒரு மாதம் முதல் மூன்று வருடங்களுக்கு குற்றங்களுக்கு ஏற்ப சிறைத்தண்டனையும் 10,000 கட்டார் றியால் தொடக்கம் 50,000 கட்டார் றியால் வரை தண்டப்பணமும் செலுத்த வேண்டிவரும். குற்றங்கள் புரிவோர் தண்டப்பணம் மட்டும் செலுத்த வேண்டும்.

அல்லது சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் அல்லது இரண்டினையும் அனுபவிக்க வேண்டிவரும் என கட்டார் அரசு மிகவும் கண்டிப்பான முறையில் அறிவித்துள்ளது.

அத்துடன் இடுப்புப்பட்டி அணியாதிருத்தல் , 10 வயதிக்கு குறைந்த பிள்ளைகளை முன் ஆசனத்தில் அமர்த்திக் கொண்டு பயணித்தல் , அம்பியுலன்ஸ் , பொலிஸ் வாகனங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்கள் என்பவற்றிற்கு முன்செல்ல அனுமதிக்காமை , முன் செல்லும் வாகனத்திற்கு இடையில் போதிய இடைவெளியில் வாகனம் செலுத்தாமை போன்றவற்றிற்கும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

No comments: